தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மஞ்சள் பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பணப்பயிர்களில் மஞ்சள் முக்கியமானது. முந்தைய காலம் முதல் தற்போதைய காலம் வரை மக்களின் பயன்பாட்டிலும், சமையல்களிலும், மங்கள நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதிலும் மஞ்சள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் கர்க்குமின் என்ற நிறமி அதிக மருத்துவ குணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி மற்றும் குண்டு மஞ்சள் ரகங்கள் பயன்படுத்தப்படுகிறது. விதை மஞ்சள் 25 முதல் 10 கிராமிற்கு எடை குறையாமலும், மூன்று முதல் நான்கு பரு கொண்டதாகவும், இருக்க வேண்டும். சாகுபடி செய்ய ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகிறது.
தரமான, அதிக விளைச்சல் தரக்கூடிய மஞ்சள் ரகங்கள் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறது.