பீர்க்கங்காய்
தேவையான பொருட்கள்
1. Grow bags அல்லது தொட்டி.
2. அடியுரமாக இட மணல், தென்னைநார் கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவியா, வேப்பம் தூள்.
3. விதைகள்
4. நீர் தெறிக்க பூவாளி தெளிப்பான்
5. பந்தல்போடுவதற்கான உபகரணங்கள்.
தொட்டிகள்
தொட்டிகளில் மண் போடும்போது அதனுடன் சம அளவு இயற்கையாக மட்கும் குப்பைகள் சேர்க்க வேண்டும்.
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டும் தொட்டியை நிரப்பலாம். இந்த கலவை தயாரானதும் உடனே கிடைக்க கூடாது.10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.
இது கொடி வகை என்பதால் மூன்று அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக் கலவையை நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
ஆரோக்கியமான மற்றும் நோய் தாக்காது விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது கொடி வகை என்பதால் 5 விதைகள் வரை ஊன்றலாம். வளர்ந்த செடிகள் ஏதாவது வளர்ச்சி குறைந்து காணப்பட்டால் அந்த செடியை மட்டும் நீக்கிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.
பந்தல் முறை
மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊ ன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.
உரங்கள்
வீட்டு சமையலறை கழிவுகளையும் ஒரு குழியில் கொட்டி மட்க செய்து அதனை உரமாகப் பயன்படுத்தலாம். இவ்வகையான உரங்களை பயன்படுத்தினால் அதற்கு மேல் வேறு தேவைப்படாது.
செடிகளை காக்கும் இயற்கை பூச்சிக்கொல்லி வேப்ப எண்ணெய் மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளை சேமித்து நன்கு காயவைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். இந்த தூளை செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர்ப் பகுதியில் போட்டு கிளறி விட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்தால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும்.15 நாட்களுக்கு ஒரு முறை கழிவுகளை கிளறுவதால் கீழே உள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால் கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் துரிதமாக இருக்கும்.
பூச்சித்தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சி விரட்டியை2 மில்லி என்றஅளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.
பஞ்சகாவியா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.
அறுவடை
இதை இரண்டு முதல் மூன்று மாதம் வரை பயன்தரும். காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.