விவசாயிகள் கோடை உழவை தவற விடக்கூடாது!!
மதுரை மாவட்டத்தில் சாகுபடி நிலத்தை கோடைகாலத்தில் உழவு செய்வது சிறந்த முறையாகும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகை பூச்சிகளை அழிக்க முடியும்.
குறிப்பாக, மண்ணில் மறைக்கப்பட்டிருக்கும் பூச்சியின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன. நிலத்தின் நீர்பிடிப்புத் தன்மை மேம்படுத்தப்படுகிறது.
மேலும், கோடை உழவு செய்வதால் அடிமண் மேல்மண்ணாகவும், மேல் மண் அடி மண்ணாகவும் நன்றாக கலப்பை கொண்டு ஆழமாகவும், சரிவுக்கு குறுக்காகவும் உழவு செய்யப்படுகிறது.
தண்ணீர் கிடைக்கும்போது வயலில் இருந்து தண்ணீர் வீணாகாமல் நிலத்தில் இறங்க வழிவகை செய்யப்படுகிறது.
மண்ணிற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. இது மண்ணில்
நுண்ணுயிர்கள் வளர்வதற்கு
ஏதுவாகும்.
கோடை உழவினால் மண்ணின் இறுக்கம் தளர்ந்து மண் பொலபொலவென்று இருக்கும்.
இதனால், பயிர் சாகுபடி செய்யும் போது வேர் நன்றாக ஓடும்.
அடி மண் மேலே வரும்போது
மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை பறவைகள் கொத்தி தின்று விடும்.
களைகள் நன்கு காய்ந்து விடும். கோரை மற்றும் அருகுகள் இருந்தால் அவற்றின் கிழங்குகளை குத்தூசி கொண்டு வெட்டி எடுத்து விடலாம்.
கோடையில் பெருமழை பெய்தால் மண் நன்றாக மழை நீரை உறிஞ்சி உள் வாங்கி ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
பூச்சி மற்றும் நோயில் இருந்து
பயிரை பாதுகாக்கவும் இந்த கோடை மழை உதவியாக இருக்கும். எனவே, விவசாயிகள் கோடை உழவை தவற விடாமல் செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குனர்
தெரிவித்துள்ளார்.